Saturday, January 14, 2017


பொங்கல் வாழ்த்து
-----------------------------------

பொங்கலொன்றும் சந்தைக்கடைச் சாகசத் திருவிழாவல்ல
சென்றோம் களித்தோம் திரும்பினோம் வீடென்பதற்கு!

முத்தான உயிர்காக்க சத்தான உணவுப்பொருள்
வித்திட்டு விளைவிக்க அயராது ஐந்துதிங்கள்
கழனியில் காத்திட்ட உழவர் களிப்போடு
அறுத்தெடுத்த நெற்கொண்டு அரிசிதனை யெடுத்து
நிலமகளைத் துதித்திடும் நிறைவான நாளிது!

நீரின்றி நிலத்தில் விளைச்சலின்றி
நெல்லரிசிப் பொங்கலில்லை யினியதனால்
மானிடரிடை மனித நேயம் பொங்கட்டும்!
மாறாத அன்பு மலர்ந்தே பொங்கட்டும்!
ஏனிந்த இழிநிலை இயற்கைக்கு எனும்
விழிப்புநிலை இதயத்தில் பொங்கட்டும்!
இயற்கையன்னை மலடகற்றியவள் கருக்கொள்ள
என்னவழி செய்வோமெனும் சிந்தனை பொங்கட்டும்!
இருக்கும் இடத்தில் பொருட்கள் விளைவிக்க
அடைத்த வழிகளைத் திறக்கும்நிலை பொங்கட்டும்!

பொங்குக பொங்கல்!
பொல்லாங்கு மனிதரிடையில்லாது
பொங்குக பொங்கல்!

14-1-2017.



கிருத்திகா, கார்த்திக், மங்கையர்க்கரசி, இரத்தனசாமி.

No comments:

Post a Comment